நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

நாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்!

இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம்.

சோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு செயற்படுவோர் தனக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து நிச்சயம் ஈடேற்றம் பெறுவர். நபிமார்களின் வரலாறு இதற்குச் சான்றாகும். எனவே முஸ்லிம்கள் பெரும்பாவங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் அல்லாஹுதஆலாவுடனான தமது தொடர்பைச் சீராக்கிக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக நமது நல்லமல்கள் முஸ்லிம்களுக்கு குறிப்பாகவும் நாட்டு மக்களுக்கு பொதுவாகவும் நிம்மதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வரும் என்பது உறுதியான விடயமாகும்.

தற்போது நிலவிவரும் அசாதாரண நிலைமை காரணமாக முஸ்லிம்கள் சற்று அமைதியிழந்து காணப்படுகின்றனர். சிலர் முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலங்களையும் இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சமூகத்தை அச்சுறுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள், இந்நாட்டில் நிலவும் சமாதானத்தையும் சகவாழ்வையும் பாதித்து நாட்டின் அபிவிருத்தியை தடைசெய்வதுடன், இந்நாட்டின் யாப்பு உறுதிபடுத்தியுள்ள உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகவும் காணப்படுகின்றன.

மேலும் தற்போது ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ள ISIS பற்றி, கடந்த வருடம் 23.07.2015ல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 12 முஸ்லிம் அமைப்புகளின் ஒப்புதலுடன் அவ்வமைப்பைக் கண்டித்து கூட்டு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமூகம் தீவிரவாத செயற்பாடுகளை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதும் தனது தாய் நாட்டுக்கு விசுவாசமாக செயற்படுகிறது என்பதும் உறுதிப்படுத்திப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது நிலவும் அசாதாரண நிலைமை பற்றி முஸ்லிம் அமைப்புக்களுடனான ஒரு அவசர கூட்டம் நேற்று (20.11.2016) மாலை ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியையும் பிரதமரையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் உரிய அதிகாரிகளையும் சந்தித்து விடயங்களை தௌவுபடுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டதுடன் இனங்களுக்கிடையேயான சகவாழ்வை கட்டியெழுப்பும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

எனவே இந்நாட்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய போதனைகளைப் பேணி, இன ஐக்கியத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளுமாறும், இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும், இஸ்திஃபார், ஸதகா, நோன்பு, துஆ போன்ற நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்புமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது. அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் உள்ள உலமாக்களும் துறைசார்ந்தவர்களும் ஜம்இய்யாவின் சகவாழ்வு பிரகடனத்தை மையப்படுத்த ஏனைய சமூகத்தவர்களுடன் தொடர்புகளை பேணிவருமாறும், மேற்குறிப்பிட்ட விடயத்தை கருத்திற்கொண்டு செயற்பட்டு, பொது மக்களுக்கு வழிகாட்டுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எச். உமர்தீன்
செயலாளர் – பிரச்சாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன