அஷ் ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மதனி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2025/007
2025.01.14 – 1446.07.13

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் அதன் புத்தளம் மாவட்ட தலைவராகவும் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும் நீண்ட காலமாக பணியாற்றிய அஷ் ஷைக் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் மதனி اللهم اغفر له وارحمه அவர்களின் மறைவையிட்டு அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் ஸாஹிராக் கல்லூரியில் தொடர்ந்து இஸ்லாமிய ஷரீஆ கல்வியை புத்தளம் காசிமிய்யா அறபுக் கல்லூரியிலும் பின்னர் பட்டப் படிப்பை மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.

மதீனாவில் இருந்து நாடு திரும்பி, காசிமிய்யா அறபுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து அதனைத் தொடர்ந்து 1989 இல் கல்லூரி அதிபராகப் பதவியேற்றார். 2024 டிசம்பர் வரை இங்கு அதிபராக சேவையாற்றினார்.

அஷ் ஷைக் அப்துல்லாஹ் மதனி அவர்களின் தந்தை சுமார் 40 வருடங்களும் அதனைத் தொடர்ந்து அவரின் சிறிய தந்தையான அஷ் ஷைக் ஷேய்க் மதார் ஆலிம் அவர்கள் ஐந்து ஆண்டுகளும் பின்னர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 35 வருடங்களுமென இக்குடும்பதினர் மொத்தம் 80 ஆண்டுகளுக்கும் மேலாக காசிமிய்யா அறபுக் கல்லூரியை நிருவகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ஜம்இய்யத்துல் உலமாவாக, 1989 முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வழிகாட்டலில், புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவராகவும் புத்தளம் நகர ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவராகவும் 2024 வரை சுமார் 35 வருடங்கள் பணியாற்றியுள்ளார். தனது இறுதிவரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

மேலும் ஹஸ்ரத் அவர்கள் ஒரு தசாப்ததுக்கும் மேலாக பெண்களுக்கான அல் குர்ஆன் மஜ்லிசை காசிமிய்யாவில் நடத்திவந்துள்ளர்.

புத்தளம் மாவட்டத்தில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வ மத குழுவை உருவாக்குவதில் முக்கிய பாத்திரம் வகித்ததுடன் அதன் நிமித்தம் பல நாடுகளுக்கும் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் பெரிய ஜுமுஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினராக, சிவில் சமூக அமைப்புக்களின் ஆலோசகராக எனப் பல்வகையில் சமய, சமூகப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அன்னார் எத்தருணத்திலும் அமைதி, அடக்கம், அன்பு, நிதானம், சகிப்பு மற்றும் தூரநோக்கு போன்ற குணாம்சங்களை கடைப்பிடித்து ஒழுகியமை சமூகப் பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் முன்மாதிரியாகும்.

இத்தருணத்தில் அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்களது மனைவி, மக்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருடைய அனைத்து நற்பணிகளையும் நல்லமல்களையும் ஏற்று, குற்றங்குறைகளை மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் குடியிருக்கச் செய்வானாக!

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

 

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன