அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் ஆகியோரிடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பு

2025.01.10ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர், உப குழுக்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் சிலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் சபையின் செயற்பாடுகள் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன், அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை ஜம்இய்யா எப்போதும் வழங்கி வருவதும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், இலங்கை முஸ்லிம்களின் சமய, பண்பாட்டு மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலும், ஜம்இய்யா இதுவரை தேசிய அளவில் மேற்கொண்ட செயல்பாடுகள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள், தனது அதிகாரத்தின் கீழ் இன, மத வேறுபாடுகளை கடந்து முக்கிய சில விடயங்களை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.

சந்திப்பின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் மேலும் சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாறூக், ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஆகியோருடன் செயலக நிர்வாகி அஷ்-ஷைக் டி. நுஃமான் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

– ACJU News –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன