அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஹன்ஸார் (இஸ்மாஈல் ஹாஜி) اللهم اغفر له وارحمه அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2025/012
2025.01.24 – 1446.07.23

தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆப் பள்ளிவாசலின் தலைவராகவும், தெஹிவளை, கல்கிஸ்ஸை மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவராகவும் நீண்ட காலமாகப் பணியாற்றிய அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஹன்ஸார் (இஸ்மாஈல் ஹாஜி) اللهم اغفر له وارحمه அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.

சிறு வயது முதல் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்த அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஹன்ஸார் (இஸ்மாஈல் ஹாஜி) அவர்கள் கொழும்பு தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2025.01.23 ஆம் திகதி காலமானார்கள்.

إنا لله وإنا اليه راجعون

அன்னார் 1988 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையில் தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபையின் கௌரவ உறுப்பினராகவும், 1996 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையில் அதன் கௌரவப் பொருளாளராகவும், 2010 ஆம் ஆண்டு முதல் தனது இறுதி மூச்சுவரையில் அதன் கௌரவத் தலைவராகவும் இருந்து, சுமார் 36 வருடங்கள் தனது சமூகப் பணியில் தடம்பதித்தார்கள்.

நிர்வாகத் திறனும் அனுபவமும் நிதானமும், சமூகப் பற்றும் ஒருங்கேபெற்றிருந்த அவர்களது இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு பேரிழப்பாகும். என்றும் நேர்த்தியையும் நேர்மையையும் வலியுறுத்தும் சுபாவம் கொண்டிருந்ததுடன், அல்லாஹ்வின் மாளிகைகளான மஸ்ஜித்களுடன் மிகுந்த இணைப்பையும் ஈடுபாட்டையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தனது நிர்வாகத் தலைமையின் கீழ் இருந்த தெஹிவளை முஹியத்தீன் பெரிய ஜுமுஆப் பள்ளிவாசலில் அல் குர்ஆன் மத்ரஸா (மக்தப்), பகுதிநேர அல் குர்ஆன் மனனப் பிரிவு, அல் குர்ஆன் உயர்கற்கைப் பிரிவு மற்றும் வாராந்த தஃப்ஸீர் வகுப்புகள் போன்றவற்றை நடாத்தி அல் குர்ஆனுக்குப் பாரிய சேவையாற்றினார்கள்.

மஸ்ஜிதின் கட்டுமானப் பணிகளின் விஸ்தரிப்பு, இஃதிகாஃப் இருப்பவர்களுக்கான ஏற்பாடுகள், மாணவர் விடுதி, மையவாடி விஸ்தரிப்புப் போன்ற பலவிடயங்களை திட்டமிட்டு சாதித்தார்கள்.

தஃவா, கல்வி, சுகாதாரம், சமூக சேவை ஆகியவற்றில் அதிகூடிய அக்கறையுடன் செயற்பட்ட அன்னார், தெஹிவளை, கல்கிஸ்ஸை மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் கௌரவத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு பிரதேசத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்களுக்கும் ஒத்தாசையாக இருந்தார்கள்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் இணைந்து இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறுபட்ட மனிதநேயப் பணிகளில் பங்காற்றியதுடன், சுனாமி அனர்த்தம், மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் போன்ற சந்தர்ப்பங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றினார்கள்.

மிக அண்மையில் கூட கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்குக்  நேரடியாக களமிறங்கி உதவினார்கள்.

இத்தருணத்தில் அவர்களது பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்களது மக்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், நண்பர்கள், பிரதேச மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருடைய அனைத்து நற்பணிகளையும் நல்லமல்களையும் ஏற்று, குற்றங்குறைகளை மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் குடியிருக்கச் செய்வானாக!

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன