ACJU/SOC/2024/005
2024.12.23 (1446-06-21)
மதிப்புக்குரிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அனைத்து மாவட்ட, பிரதேசக் கிளை உறுப்பினர்கள், அனைத்து மஸ்ஜித் சம்மேளன உறுப்பினர்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், நலன் விரும்பிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் மனிதநேயப் பணிகளில் உளச்சுத்தியுடன் தொடர்ந்தும் செயற்படும் பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமீன்.
கடந்த நவம்பர் மாதம் நாட்டில் பெய்துவந்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்படவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு பொதுவாக அனைவரிடமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையகம் வேண்டிக்கொண்டது.
அதற்கமைய பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட, பிரதேச கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்போர் என அனைத்துத் தரப்பினரும் தம்மால் முடியுமான ஒத்துழைப்புகளை நிதியாலும் பொருளாலும் உடலாலும் பிரார்த்தனைகளாலும் வழங்கியமையினையிட்டு அனைத்து நல்லுள்ளங்களையும் பாராட்டி மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட பிரதேச கிளைகள், மஸ்ஜித் சம்மேளனங்கள், மஸ்ஜித் நிர்வாகங்கள், ஊர் நலன் விரும்பிகள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து பாதிப்புக்குள்ளானவர்களை மீட்டெடுத்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பும் வரை பாதிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து நிதியாகவும் பொருளாகவும் சேமிக்கப்பட்டவற்றை தேவையுடையோரை இனங்கண்டு பகிர்ந்தளித்து முழு மூச்சாக ஒத்தாசையாகச் செயற்பட்டீர்கள்.
அல்லாஹு தஆலா உங்கள் அனைவரதும் பெறுமதிவாய்ந்த முயற்சிகளையும் ஒத்துழைப்புகளையும் அங்கீகரித்து, உங்களது ஆயுள், பொருள், தொழில், வியாபாரங்கள், விவசாயங்கள் என சகலவற்றிலும் பாதுகாப்பையும் பரக்கத்தையும் தந்தருள்வானாக!
ஜஸாகுமுல்லாஹு கைரன்.
முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
செயலாளர் – சமூக சேவைப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை