ACJU/FRL/2025/07-425
11.03.2025 (10.09.1446)
அல்லாஹ்வின் அருளையும் மன்னிப்பையும் வழங்கும் புனித ரமழான் மாதத்தில் உள்ளோம். நாம் அனைவரும் அதிகமாக நல்ல செயல்கள் செய்து, அல்லாஹ்வின் பொருத்தத்தையும் நெருக்கத்தையும் அடைய முயற்சித்து வரும் இச்சமயம், எமது செயற்பாடுகளாலும் நடவடிக்கைகளாலும் பிறருக்கு எந்தவித இடையூறும் தொந்தரவுகளும் ஏற்படாமல் கவனித்துக் கொள்வது நம் மீது கடமையாகும்.
இஸ்லாம், அண்டை வீட்டார்களுக்கு தங்களால் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது. ‘தனது தீங்குகளிலிருந்து அண்டை வீட்டார் பாதுகாப்பாக இருக்கவில்லை என்றால், அவர் உண்மையான ஒரு முஃமினாக இருக்க முடியாது’ என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அறிவுரையும் இதைத் தெளிவாக உணர்த்துகிறது.
தராவீஹ் தொழுகை, இப்தார் நிகழ்ச்சிகள், பயான் நிகழ்ச்சிகள் போன்றவை ரமழான் மாதத்தில் நடைபெறுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளாகும். இதன் மூலம் எமது சமூகம் பல்வேறு பயன்களைப் பெறுவது யாராலும் மறுக்க முடியாது.
ஆயினும், இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது ஒலிபெருக்கியின் சத்தம் அளவுக்கு அதிகமாக உயர் நிலையில் வைப்பதனால் சுற்றுப்புறத்திலுள்ள சிறுவர்கள், நோயாளிகள், வயோதிபர்கள் போன்றோருக்கு பெரும் தொந்தரவாக மாறுகிறது.
அதேபோல்,
• வீடுகள் மற்றும் கடைகளில் வானொலி சத்தங்களை அதிகரித்து வைத்தல்
• வாகனங்களை ஒழுங்கின்றி நிறுத்துதல்,
• பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும்வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்தல்,
• காரியாலயங்கள் மற்றும் வியாபார தலங்களிலிருந்து இறுதி நேரத்தில் வெளியேறி, இஃப்தாருக்கு வீடு செல்லும் நோக்கில் அதிகவேகமாக வாகனங்களை செலுத்துதல்
போன்ற செயல்களால் பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுண்டு.
தொழுகை போன்ற வணக்கங்கள் மற்றும் இதர செயற்பாடுகளின் போது பிறருக்கு இடையூறின்ற நடந்து கொள்வதை பின்வரும் அல்குர்அன் வசனம் மற்றும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا (17:110)
“இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர்; மேலும், இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக!” (17:110)
عن المِقْدَادُ رضي الله عنه … كنا نَرَفَعُ للنبي صلى الله عليه وسلم نَصِيبَهُ من اللَّبَنِ ، فَيَجِيءُ من الليل، فَيُسَلِّمُ تسليما لا يُوقِظُ نائما، ويُسْمِعُ اليَقْظَانَ، فجاء النبي صلى الله عليه وسلم فَسَلَّمَ كما كان يُسَلِّمُ. (صحيح مسلم : 4177)
‘(நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றோம். அவர் வீட்டில் உள்ள மூன்று வெள்ளாடுகளிலிருந்து பால் கறந்து பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள்.) அவ்வாறே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கைப் பருகினோம். நபி (ஸல்) அவர்களுக்குரிய பங்கை அவர்களுக்காக எடுத்துவைத்தோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் (எங்களிடம்) வந்து, உறங்கிக்கொண்டிருப்பவரை விழிக்கச் செய்யாமல், விழித்திருப்பவர்களுக்குக் கேட்கும் விதமாக (மெதுவாக) முகமன் (சலாம்) சொல்வார்கள் என மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.’ (ஸஹீஹு முஸ்லிம்: 4177)
எமது நாட்டில் ஒவ்வொரு சமூகத்தினரும் தமது மார்க்க வழிகாட்டுதலின்படி வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கான முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். எனினும், அந்த சுதந்திரம் தமது சமூகத்தினருக்கோ பிற சமூகத்தினருக்கோ இடையூறாக அமையக்கூடாது. அதே சமயம், நாட்டின் சட்டங்களுக்கு முரணாகவும் இருக்கக் கூடாது.
எனவே, ஒலிபெருக்கியின் சத்தத்தை தேவைக்கு அதிகமாக அதிகரிப்பதை தவிர்ப்பதுடன் ஒவ்வொரு மஸ்ஜிதும் தமது பிரதேசத்தின் நிலைமைகளை கருத்தில் கொண்டு பிறருக்கு இடையூறு ஏற்படாமல் செயல்பட வேண்டும் என அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளையும் இமாம்களையும் பொதுமக்களையும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா அன்புடன் வேண்டிக்கொள்கிறது.
முஃப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா