புனித மக்கா நகரில் நடைபெற்ற ’46ஆவது, மன்னர் அப்துல் அஸீஸ் – சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில்’ வெற்றியீட்டிய இளம் ஹாபிழ் இம்தாத் இயாஸ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, 2026 ஆகஸ்ட் 25ஆம் திகதி, இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் ஜம்இய்யா தலைமையகத்தில் நடைபெற்றது.
இதன்போது, ஜம்இய்யாவின் உப பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் அவர்கள், அல்-ஹாபிழ் இம்தாத் இயாஸ் உள்ளிட்ட குழுவினரை வரவேற்று உரை நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து, உரையாற்றிய ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள், பல சர்வதேச நாடுகள் கலந்துகொண்டிந்த இப்போட்டி நிகழ்ச்சியில் இலங்கை சார்பில் கலந்துகொண்டு வெற்றியீட்டி நாட்டிற்கும் எமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமையை பாராட்டியதுடன் தனது வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்.
அத்தோடு, சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டிகளில் தொடராக இலங்கை ஹாபிழ்கள் கலந்துகொண்டு வெற்றியீட்டி வருகின்றமைய குறிப்பிட்டுக் காட்டியதுடன் அதற்கான அடித்தளத்தை இட்டுத்தந்த எமது மூத்த ஆலிம்களையும் அவர்களது அளப்பரிய முயற்சிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இறுதியாக, ஜம்இய்யாவினால் அச்சிடப்பட்டு விரைவில் விநியோகிக்கப்படவுள்ள சுமார் 17,000 ஜுஸ்உ அம்ம தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளில் முதற்பிரதியானது, அல்-குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய இளம் ஹாபிழ் இம்தாத் இயாஸ் மற்றும் சக போட்டியாளர் அல்-ஹாபிழ் முஹம்மத் இஃப்பத் சயீத் ஆகியோருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்தோடு ஜம்இய்யாவின் ஏனைய சில வெளியீடுகளும் இதன்போது கையளிக்கப்பட்டன.
இதில், ஜம்இய்யாவின் தலைவர், உப தலைவர்கள், உப பொதுச் செயலாளர்கள், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருடன் ஜம்இய்யாவின் ஆளணியினரும் கலந்துகொண்டனர்.









– ACJU Media –


