இஸ்லாத்தை அவமதித்து மத நல்லிணக்கத்தை சீர்குலைத்த குற்றத்திற்காக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட இந்திக தொடவத்த என்ற நபர் மீதான வழக்கு விசாரணையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் மனுதாரராக சாட்சியமளிக்கச் சென்றார். குறித்த வழக்கு 2024.12.13ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்கள் ஆஜராகியிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சட்டத்தரணி சுசந்தா தொடவத்தே ஆஜராகி குறித்த வழக்கை தீர்ப்பதற்கான ஓர் இணக்கமான முன்மொழிவை மன்றில் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை நிபந்தனையுடன் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு புகார்தாரர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
எனினும், குறித்த வழக்கு நிறைவு பெற வேண்டுமெனில் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையினை நீதிபதி மன்றில் தெரிவித்தார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் முடிவை அடுத்த விசாரணையில் சமர்ப்பிக்க நீதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கின் அடுத்த விசாரணை 2025.01.28ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
– ACJU Media –